"தைப்பொங்கல்" - பொங்கல் நாளிலேயே பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டுமா? மாலை நேரப் பொங்கல் ஏன்?
01. தமிழர்களுக்கு பல திருவிழாக்கள் இருந்தாலும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த, உழவு சார்ந்த, இயற்கையோடும் கால்நடையோடும் இணைந்து கொண்டாடும் ஒரேயொரு திருவிழாவாக தைப்பொங்கல் திருவிழா அமைவதாலும், ஆசுத்திரேலியாவில் பாடசாலை / பள்ளிக்கூட / பல்கலைக்கழக கோடை விடுமுறைக் காலத்தில் இந்த திருநாள் வருவதாலும் பொங்கல் அன்றே கொண்டாடுவதற்கு நல்ல தருணமாக அமைந்திருக்கிறது.
02. புலம்பெயர்ந்து வாழும் பலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிமைப்பட்டும், தனிக் குடும்பங்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு பொங்கல் நாளில் மற்ற தமிழ்க் குடும்பங்களோடு ஒன்றுகூடிப் பொங்கும் நிகழ்வாக தைப்பொங்கல் நிகழ்வை கொண்டாடுவது என்பது, தாயகத்தில் தமது குடும்பத்தாரோடு கொண்டாடுவது போன்ற மன நிறைவைத் தரும் என நம்புகின்றோம்.
03. தமிழர்கள் தமது அடையாளமாக, பெரும் அளவில் திரண்டு தமிழர்களின் திருவிழாவாக, பெருவிழாவாகக் கொண்டாடுவது, எமது எதிர்காலச் சந்ததிக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் தமிழ்ப் பண்பாடு பற்றிய முழுமையான புரிதலையும் கவனிப்பையும் கொடுக்கும்.
04. பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்த உணவு. கோவில் வழிபாட்டின்போது படையல்களில், வயல் அறுவடையின்போது, அடிக்கல் நடுதலின்போது, குளங்களில் நீர் நிறையும்போது, தென்னம்பிள்ளை காய் பாளைவிடும்போது....இப்படியாக தமிழர் வாழ்வோடு இணைந்த அனைத்து நிகழ்வுகளிலும் முதன்மை அடையாளமாகக் பொங்கல் கருதப்படுகின்றது. அதனைப் போலவே, தமிழரின் முதன்மை திருவிழாவாக, தைப்பொங்கல் திருவிழா அமைவதால் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.
05. தைப்பொங்கல் நாளில் வீடுகளில் கட்டாயமாகப் பொங்க வேண்டும் என்ற சடங்கு பலராலும் பின்பற்றப்படுகிறது . இருப்பினும் பணிக்குச் செல்லும் பலரால் அது இயலாமல் போகிற காரணத்தால், அவர்களுக்கும் வசதியாக வேலைக்குச் சென்று வீடு திரும்பியபின், நிதானமாக மாலை நேரத்தில் ஊர் கூடிப் பொங்கல் வைப்பது வசதியாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.
06. நாம் வாழும் ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் தைப்பொங்கல் நாளன்று பொதுவாக கடுமையான வெப்பநிலை நிலவும். எனவே, மாலை நேரத்தில் பொங்கல் வைத்துக் குடும்பத்தினர்களோடு இணைந்து, உறவினர்கள் நண்பர்களோடு கூடிக் கொண்டாடுவது என்பது இனிமையானதாக அமையும் என நம்புகின்றோம்.
07. பொங்கல் அன்றே பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி வந்தால், காலப்போக்கில் அரசின் கவனம் பெற்று அரசு அங்கீகாரம் கிட்டுவதோடு, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் விடுமுறை எடுக்கவும் உதவும். அத்தோடு அரசு தைப்பொங்கல் திருநாளை தமிழர்களின் தேசியத் திருவிழாவாக அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
08. தற்போது தொழிநுட்ப வசதிகளால் உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் தகவல்களை காட்சியாக பகிர்ந்தும் கொள்ளும் வசதி உண்டு. எனவே, தைப்பொங்கல் நாள் பற்றி தாயகத்தில் உள்ள உறவுகளோடு இணைந்து ஒரே நாளில் கொண்டாடும்போது தைப்பொங்கல் நிகழ்வு முழுநிறைவான நிகழ்வாக அமையும்.
09. தைப்பொங்கல் நாள் என்பது தமிழ்நாட்டில் 3 அல்லது 4 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக கொண்டு சிறப்பிக்கப்படும் திருநாளாகும். இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் ஒரு நாள் பொதுவிடுமுறை நாளாக தைப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தைப்பொங்கல் நாள், பொது விடுமுறை நாளாக வரும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் தமிழர்களின் அடையாளமாக, அனைவரும் அந்த நாளில் தனிப்பட்ட விடுமுறையை தெரிவு செய்து, தைப்பொங்கல் நாளை சிறப்பாக கொண்டாடுவது அந்த நாளுக்கான கனதியை பதிவு செய்து எமது எதிர்காலச் சந்ததிக்கும் நல்ல வழிப்படுத்தலை வழங்கும் என்ற கருத்து உண்டு.
0 Comments